2083. புண்ணிய முலர்ந்தபின் பொருளி லார்களைக்
கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
எண்ணில ளிகந்திடும் யாவர் தம்மையும்
நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே.
 
     (இ - ள்.) பொருள் இலார்களை - கைப்பொருள் உலர்ந்து நல்கூர்ந்தாராயினாரை,
கண்ணிலர் துறந்திடும் - கண்ணோட்டம் இலராய் அகற்றி விடுகின்ற, கணிகை
மார்கள்போல் - வரைவின் மகளிரைப்போன்று, புண்ணியம் உலர்ந்தபின் - ஆகூழ்
கழிந்தவுடனே, எண்ணிலள் - அவர்தம் கேண்மையை நினையாதவளாய், இகந்திடும் -
நீங்கிப்போவாள், யாவர் தம்மையும் - எத்திறத்தாரிடத்தும், நண்ணிய நண்பு இலள் -
பொருந்திய அன்பு இல்லாதவள், நங்கை வண்ணம்-திருமகளின் தன்மை இஃதாம், (எ- று.)

     “கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
     போக்கு மதுவிளிந் தற்று“

     பொருள் உலர்ந்தவுடனே கணிகையர் தம்மை மருவிய மைந்தரைப் புறக்கணித்து
விடுவது போன்று. திருமகளும் ஆகூழ் அகன்றவுடன் தன்னையுடையோரை ஒருவி
நீங்குவள் என்க.
 

( 15 )