பயாபதி அணிகலன் களைதல்

2097. அணிமுடி யமரர்தந் தாற்றப் பாற்கடல்
மணிமுடி யமிர்தநீ ராடி மாதவர்
பணியொடு பன்மணிக் கலன்க ணீக்கினான்
துணிவொடு சுரமைநா டுடைய தோன்றலே.
 
     (இ - ள்.) அணிமுடி அமரர் தந்து ஆற்ற - அழகிய முடிக்கலனுடைய தேவர்கள
கொணர்ந்துதர, பாற்கடல் அமிழ்த நீர் - பாற்கடலினுளதாகிய அமிழ்தத் தன்மையுடைய
பாலாகிய நீராலே, மணிமுடி ஆடி - அழகிய தலைமுழுகி, மாதவர் பணியொடு - சிறந்த
துறவியரை வணங்குதலுடனே, பன்மணிக் கலன்கள் நீக்கினான் - பலவாகிய
மணியணிகலன்களைக் களைந்து நீக்கினான், துணிவொடு - அறிவுத் தெளிவுடனே, சுரமை
நாடு உடைய தோன்றல் - அவன் யாரெனில், சுரமை நாட்டிற்கு மன்னனாகிய புகழ்மிக்க
பயாபதி, (எ - று.)

     மாதவர் பணியொடு - துறவிகளின் ஏவலுடனே எனினும் ஆம் செயற்கரிய செயலாகிய
தவம் செய்தற்குத் துணிவுடைமை இன்றியமையாது வேண்டப்படுதலின், துணிவொடு...
நீக்கினான் என்றார். துணிதலாவது மெய்யறிவு எய்தித் தெளிவுடையனாதல். சுரமை
நாடுடைய தோன்றல் என்றது பயாபதி துறத்தற்குத் துணிந்த பொருளின் சிறப்பை விளக்கி
இத்தனைச் சிறப்புடைய பொருள்களையும் துணிவொடு துறந்தான் எனப் பயாபதியின்
பெருமையைச் சிறப்பித்தமை காண்க.
 

( 29 )