விசயதிவிட்டர்கட்கு முனிவர் கூறும் தேற்றரவு

2105. நின்றிலா நிலைமையி னீங்கி நின்றதோர்
வென்றியா லுலகுடன் வணக்கும் வீரியம்
இன்றுகோன் புரிந்ததற் கிரங்கல் வேண்டுமோ
என்றுதா னிளையரை முனிவர் தேற்றினார்.
 
     (இ - ள்.) நின்றிலா நிலைமையின் நீங்கி - நிலையுதலில்லாததோர் உலகியல்
வாழ்வின் நிலையினின்றும் அகன்று, நின்றதோர் வென்றியால் - நிலைத்து நிற்றலைப்
பெறுவதொரு வெற்றி பெறுமாற்றானே, உலகுடன் வணக்கும் வீரியம் - உலகம் எல்லாம்
தன்னை வணங்குமாறு செய்துகொண்ட பேராண்மையை, இன்று கோன் புரிந்ததற்கு -இன்று
அரசன் செய்தமைக்கு, இரங்கல் வேண்டுமோ -(மகிழ்தல் நிற்க) வருந்துதலும் வேண்டுமோ,
என்றுதான் - என்று எடுத்துக்கூறி, இளையரை - விசய திவிட்டர்களை, முனிவர்-துறவி,
தேற்றினார் - தேற்றரவு செய்தனர், (எ - று.)
    பயாபதிக்கு அறவுரை கூறிய துறவியார், விசயதிவிட்டர்களை நோக்கி, 'உங்கள் தந்தை,
மேற்கொண்டுள்ள செயல் அவர்க்கு மேலும் நன்மையே விளைவிக்கும் ஆதலின் இச்செயல்
தொடங்கியதற்குப் பெரிதும் மகிழவேண்டும், அப்படி இருக்கவும் நீங்கள் இவ்வண்ணம்
துயருறுதல் தகுதியாகாது' என்று கூறித் தேற்றினார் என்க.

( 37 )