2115. நிறையிலார் பொறுத்த லாற்றா
     நிலையிது நிறைந்த நோன்மைக்
கறையிலீ ராறுக் கொத்த
     3கண்ணியர் கவரி 4வீச
முறையினாற் பெருகு முள்ளச்
     சமாதிநீர் முறுக வுண்ட
குறைவிலாத் தியான மென்னுங்
     கொற்றவா ளுருவிக் கொண்டான்.
     (இ - ள்.) நிறையிலார் - மூவகை அடக்கமும் இலாதார், பொறுத்தல் ஆற்றா
நிலையிது - தாங்குதல் இயலாத இவ்வுயரிய நிலையின்கண் நின்று, நிறைந்த நோன்மை -
பெருகிய ஆற்றலுண்மையால், கறையில் ஈர் ஆறுக் கொத்த கண்ணியர் - குற்றமற்ற
பன்னிருவராகிய மாலையினையுடையார், கவரிவீச - சாமரையிரட்டாநிற்ப, முறையினாற்
பெருகும் உள்ளச் சமாதி நீர் முறுக உண்ட - படிப்படியாக மிகாநின்ற மெய்யுணர்ச்சி
யென்னும் அமிழ்தநீரை மிக்குண்ட, குறைவிலாத் தியானம் என்னும் - குற்றமற்ற தியானம்
என்று கூறப்படும், கொற்றவாள் உருவிக் கொண்டான் - வெற்றிக்குக் காரணமான வாளை
உறை கழித்துக் கைக்கொண்டான், (எ - று.)

     பன்னிருவர் - துவாதாசாநுப் பிரேக்ஷைகள். தரும சுக்கிலத் தியானப் பயிற்சியே
நாளடைவில் உயிரின் குற்றங்களைக் தேய்த் தொழித்தற்குரிய கருவியாதலின் “தியான வாள்“
என்றார்.
     அநுப்பிரேக்ஷைகள் பன்னிரண்டும் கவரியிரட்டும் மகளிராக உருவகிக்கப்பட்டன.
 

( 47 )