(இ - ள்.) அருமால் வினை அகல - கடத்தற்கரிய மயக்கத்தைப் பற்றி வருகின்ற இருவினைத் தொடர்பு அகன்றொழியவும், அமரர் நாளும் அடிபரவ - தேவர்கள் நாடோறும் தன் திருவடிகளை வாழ்த்தவும், பெருமான் பிரசாபதி - பெரியோனாகிய பயாபதி அடிகள், பிரமலோகம் இனிது ஆள - வீட்டுலகத்தை இனிதாக ஆட்சி செய்யாநிற்ப, திருமால் - திருமாலாகிய திவிட்டமன்னன், பெருநேமி திகழ்ந்த - பெரிய ஆழிப்படை விளங்காநின்ற, செந்தாமரைத் தடக்கை - செந்தாமரை மலர் போன்ற தன் பெரிய கைகளாலே, கருமால் கடல் வரைத்த - கரிய பெரிய கடலை எல்லையாக உடைய, கண்ணார் ஞாலம் - இடம் அகன்ற இவ்வுலகங்களை, காக்கின்றான் - இனிதே ஓம்பா நின்றான், (எ - று.) பயாபதி மன்னன் வீட்டுலகினையும் அவன் மகன் மண்ணுலகினையும் ஒருங்கே ஆட்சி செய்தனர் என்றபடி. கடல் வரைத்த - கடல்களை எல்லையாகவுடைய, எனவே உலகமுழுதும் என்றபடி. |