(வேறு)
வரிப்பாட்டு
சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்

214. ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கிய
சேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம்.
 

     (இ - ள்.) ஆதிஅம்கடவுளை - எல்லாப் பொருள்களுக்கும் முதன்மையான அழகிய
கடவுளாக இருக்கின்றாய், அருமறை பயந்தனை - அறிதற்கரிய மறைகளைத் தந்தருளினாய்,
போதி அம்கிழவனை - மெய்யறிவுக்கு உரியவனாக இருக்கின்றாய், பூ மிசை ஒதுங்கினை -
தாமரை மலரின்மேற் சென்றருளினாய், போதி அம்கிழவனை - மெய்யறிவுக்கு உரியோனே!
பூமிசை ஒதுங்கிய - தாமரை மலர்மேல் நடந்த; சேதி - வீடாகிய, அம்செல்வ - அழகிய
செல்வத்திற்குரியவனே! நின்திருவடி வணங்கினம் - உனது அழகிய திருவடிகளைப்
போற்றினோம். (எ - று.)

அம் நான்கையும் சாரியையாகக் கொள்ளினும் அமையும். முதற் கடவுளாக இருக்கின்றாய்;
அரிய மறைகளை அருளிச்செய்தாய்; மெய்யறிவுக்கு உரியவனாக இருக்கின்றாய்; தாமரை
மலர்மேற்சென்ற ருளினாய். இத்தகைய நின் அடிகளை வணங்கினோம் என்பதாம். சேதி -
வீடு; சேதி - சினாலயம் என்பாருமுளர்; அவரறியார். “சேதியின் நெறியின் வேறுசிந்தை
செய்யாச் சாதுவர்“ என்புழி யசோதர காவியத்துச் சேதிநெறி - வீட்டுநெறி என்றே
பொருள்படுதலான் என்க.

யசோதர காவியம் 56 ஆம் செய்யுள் காண்க. கடவுளை, கிழவனை என்புழி ஐகாரம்
முன்னிலை யசை.

( 96 )