வேறு
சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்

217. கருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்
வெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்
மருவுடை மொழிகளாற் பரவி வாமன
திருவடிச் சேடமுந் திகழச் சூடினாள்.
 

      (இ - ள்.) கரு - கரிய, வடி - கூரிய, நெடு - நெடிய, நல்வேல் - நல்ல
வேற்படையைப் போன்ற, கண்ணி - கண்களையுடையவளான சுயம்பிரபை, இன்னணம் -
இவ்வாறு, வெருவு உடை வினைப்பகை விலக்கும் வீறுசால் - உயிர்கள் அஞ்சப்படுதலை
யுடைய கருமங்களாகிய பகைகளை நீக்கவல்ல பெருமை மிகுந்த, மருவு உடைமொழிகளால்
- விரும்பப்படுந் தன்மையுள்ள சொற்களால், பரவி - அருகக்கடவுளை வழிபட்டு, வாமன
திருஅடிச் சேடமும் - அருகக்கடவுளினுடைய திருவடிகளில் தூவிய மலராகிய சேடத்தையும்
திகழச் சூடினாள் - விளங்குமாறு அணிந்துகொண்டாள். (எ - று.)

கருவடி - கரியமாவடுவுமாம்; 'வடுப்பிள வனைய கண்ணாள்' என்பது சீவகசிந்தாமணி.
சுயம்பிரபை அருகக்கடவுளை வழிபட்ட பிறகு அக்கடவுளின் அடிகளில் அருச்சித்த
மலர்களைத் தன்னுடைய முடியிலே சூடிக்கொண்டாள். வாமன - திருவடி, அ, ஆறாம்
வேற்றமைப் பன்மையுருபு, வாமனுடைய திருவடிகள், என்பது பொருள்.

( 99 )