(இ - ள்.) வான்உயர் கடவுளை - மிகச் சிறந்த தெய்வமான அருகக்கடவுளினது, வயங்கு சேஅடி - விளங்குகிற சிவந்த திருவடிகளில் சாத்திய, தேன்உயர் திருமலர் - தேன் மிக்க சிறந்தமலர்களாகிய, சேடம் கொண்டபின் - வழிப்பாட்டுப் பொருளைப் பெற்றுக்கொண்ட பிறகு, மங்கை - சுயம்பிரபை, மான்உயர் நோக்கியர் பரவ - மான்பார்வைபோலச் சிறந்தகண் பார்வையை உடையவர்களான தோழியர் வழிபாடு செய்ய, தன்கோன் - தன் தந்தையினுடைய, உயர்வளம்நகர்க் கோயில் முன்னினாள் - சிறந்த வளப்பமுள்ள நகரத்தின் கண்ணேயிருக்கின்ற அரண்மனையை அடைந்தாள். (எ - று.) நோன்பு முதலியவற்றை முடித்துக்கொண்ட சுயம்பிரபை தன்னுடைய தந்தையின் இருப்பிடத்தை அடைந்தனள். கடவுளை என்னுமிடத்தில் உருபு மயங்கிவந்தது. வானுயர் - ஒருபொருட் பன்மொழி; வானுலகத்திலே உயர்ந்து விளங்குகின்ற கடவுள் எனினுமாம். |