அரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்

226. கொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட்
கிவ்வகை யணியன கூறி யீண்டுநும்
மவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென
மவ்வலங் குழலியை மன்ன னேயினான்.
 

     (இ - ள்.) மன்னன் - சுவலனசடியரசன், கொவ்வையந் துவரிதழ்க் கோலவாய்
அவட்கு - கொவ்வைப்பழம் போலச் சிவந்த இதழ்களையுடைய அழகிய வாயையுடைய தன்
மகளுக்கு, இவ்வகை அணியன கூறி - இவ்வாறு அழகிய மொழிகளைச் சொல்லி, ஈண்டு -
இப்பொழுது, நும் அவ்வைதன் கோயில்புக்கு - நின்னுடைய தாயின் அரண்மனையை
அடைந்து, அடிசில் உண்க என - உணவு உண்பாயாக என்று கூறி, மவ்வல் அம் குழலியை
ஏயினான் - முல்லை மலரை யணிந்த அழகிய கூந்தலையுடைய தன் மகளாகிய
சுயம்பிரபையைப் போக்கினான். (எ - று.)

சக்கரவாள நோன்பு உணவுவிட்டு நோற்கும் நோன்புகளுள் ஒன்றாகையால், அதன்படி
பட்டினிகிடந்த சுயம்பிரபையைத் தன் தாயினிடத்தே சென்று விரைவில் உணவு
கொள்ளுமாறு அனுப்பினான் மன்னன். கொவ்வை, மவ்வல் என்ற கொடிகளின் பெயர் அவற்றின் பழத்திற்கும் பூவிற்கும் முதலாகுபெயர். இதழ் - உதடு. அணியன கூறி - அழகிய
புனைந்துரை மொழிகளை உரைத்து. நும்தாய் என்றது, யான் எம்மூர்க்குச் செல்வேன்
என்றாற்போன்று அவளுடன் பிறந்தானையும் உளப்படுத்தி நின்றது. அவ்வை, மவ்வல் -
முதற்போலி ஒளவை, மௌவல். அடப்பட்டது அடிசில் என உணவுக்குக் காரணப் பெயர்.

( 108 )