தன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்

229. மையணி வரையின் வாழ மன்னர் தொல்குடிக்
கையணி நெடுநல்வேற் காளை மார்களுள்
நெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்
மெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே.
 

      (இ - ள்.) மை அணிவரையின்வாழ் - முகில்கள் அழகாகத் தவழுகின்ற
வெள்ளிமலையிலே வாழுகின்ற, மன்னர் வித்தியாதர அரசர்களுடைய, தொல்குடி -
பழமையான குடும்பங்களிலுள்ள, கையணி நெடுநல்வேற் காளைமார்களுள் - கையிற்
பொருந்திய நீண்ட சிறந்த வேற்படையையுடைய இளைஞர்களுள், நெய் அணி குழல்
இவட்கு உரிய நீர்மையான் - எண்ணெய் தடவிய கூந்தலையுடைய சுயம்பிரபைக்குக்
கணவனாதற்குரிய தன்மையுடையவன், மெய்யணி பொறியவன் வீரன் - உடம்பிற்
பொருந்திய நல்ல அழகும் ஆகூழுமுடைய வீரன், எவன்கொல் - யாவனோ? (எ - று.)

இந்த வெள்ளிமலையில் வாழ்கின்ற வித்தியாதர அரச குடும்பத்து மைந்தர்களுள்
சுயம்பிரபைக்குக் கணவனாதற்குத் தகுதிவாய்ந்த நல்லிலக்கண முடையவன் எவனோ என்று
சுவலனசடி எண்ணமிடுகிறான். வெள்ளிமலை முகின்மண்டலம் வரையில்
உயர்ந்தோங்கியுள்ளதாகலின், 'மையணி' வரை என்றார்.

“மேகமே மிடைந்து தாழ விருள்கொண்ட வெள்ளிக் குன்றம்
மாகத்து விளக்கித் தோன்றும் வனப்புநாம் வகுக்க லுற்றால்
நாகந்தான் கரிய தொன்று கீழ்நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட பான்மதி போன்ற தன்றே“

என்னும் சிந்தாமணியும் ஈண்டு எண்ணத்தக்கது.

( 111 )