அமைச்சர்கள் துணைகொண்டு அரசன் அரசியற்
சுமையைத் தாங்குவன்

245. வீங்குநீ ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே
தாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர் 
பாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்
பூங்குலா மலங்கண் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே.

     (இ - ள்.) தளை அவிழ் தயங்குதாரீர் - கட்டவிழ்ந்த மலர்கள் பொருந்திய
மாலையை அணிந்த அமைச்சர்காள்!, வீங்குநீர் உலகம் காக்கும் விழுநுகம் - மிகுந்த நீர்
பொருந்திய கடலாற் சூழப்பட்ட உலகத்தினைப் பாதுகாக்கும் உயரிய அரசாட்சிச்
சுமையானது, ஒருவனாலே தாங்கலாந் தன்மையமைந்ததன்று, பாங்கு அலார் பணிய -
நட்பற்ற பகைவர்களும் தன்னைப் பணிந்து தன்வழியொழுக, சூழும் நூலவர் பாகமாக -
தன்னைச் சூழ்ந்துள்ள அறநூல்களை யுணர்ந்தவர்களான அமைச்சர்கள் பக்கத் துணையாக,
பூங்குலாம் அலங்கன் மாலைப்புரவலன் - மலர்களமைந்து விளங்கும் அசைகின்ற
மாலையை அணிந்த அரசனானவன், பொறுக்கும் - தான் அரசாட்சிச் சுமையைத்
தாங்குவான் (எ - று.)
அன்றே : அசை.

அரசியற்சுமை அரசனாகிய ஒருவனால் மட்டும் சுமக்க வியலாத தொன்று. அமைச்சர்களும்
துணையாக நின்று தாங்கியபொழுதே இனிது தாங்கப்படு மியல்யுடையது என்கிறான்
அரசன். வீங்கு நீர் - மிகுதியாகிய நீர்; எனவே கடலுக்காயிற்று. நுகம் - நுகத்தடி, பாரம்,
நடுவு நிலைமை, வலிமை, கதவின் கணையமரம்.

( 7 )