அரசன் முகமன் மொழிதல்

246. அற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்
கற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு
மற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்
செற்றவர்ச் செகுக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே.
 

     (இ - ள்.) அற்றம் இன்று உலகம் காக்கும் - சோர்வின்றி உலகத்தைப் பாதுகாக்கும்,
அருந்தொழில் புரிந்து நின்றான் - அரிய அரசாட்சித் தொழிலை மேற்கொண்டு நின்ற
மன்னனுக்கு, கற்றவர் - அவனுடைய அமைச்சர்கள் - மொழிந்தவாறு -
ஆராய்ந்துணர்த்தியபடியே கழிப்பது - வினைகளைச் செய்து முற்றுவிப்பது ஒன்றே, கடனது
ஆகும் - கடமையாகும். தெருண்டவர் - நூல்களைக் கற்றுத் தெளிந்த அமைச்சர்க்கு
அவற்கு - அங்ஙனம் தம்வழிப்பட்டு நின்ற அரசனுக்கு, உறுதி நோக்கி -
ஆக்கமானவற்றைக் குறிக்கொண்டு அவற்றைப் பெறுதற்குரிய வழிகளை வகுத்துக்
காட்டலும், பழிவரு வழிகள் தூர - அவனுக்குப் பழியுண்டாதற்குரிய நெறிகளை அழித்து,
மேலும்; செற்றவர்ச் செகுக்கும் சூழ்ச்சி - அவனுடைய பகைவர்களை அழிக்கும்
உபாயங்களைக் கண்டுணர்த்தலும், கடவ - இன்னோரன்ன பற்பல கடமைகளும் உள்ளன.
(எ - று.)

மன்னன் கடமை அமைச்சர் சொற்படி நடத்தல் ஒன்றே; அமைச்சர்கட்கு அரசனுடைய
ஆக்கங்கருதி ஆற்றவேண்டிய கடமைகள் பற்பல உள்ளன என்பதாம்.

“அரசுவாளின்மேல் வரும் மாதவம்“ என்பது பற்றி அருந் தொழில் என்றார். கற்றவர்
என்றது ஈண்டமைச்சரை. கடனது என் புழி அது பகுதிப் பொருள் விகுதி. மற்று :
வினைமாற்று. பழிவழிகள் தூர என்றதனால் நன்னெறிகளை வகுத்து என்க. செற்றவர் -
பகைவர். தெருண்டவர் - ஈண்டமைச்சர். இஃது அரசன் அமைச்சர்க்குக் கூறிய முகமன்.

( 8 )