சூழ்ச்சியுட் சிறந்தோர் மாட்சிபெறுவர்

249.

ஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்
சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூட்சியுட் டோன்று மன்றே
யாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி
வாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே.
 

     (இ - ள்.) ஊழ்வரவு அன்னதேனும் - ஒருவகையான் நோக்குமிடத்துச் செயல்
ஊழான் வரும் வரவினையுடையது எனினும், ஒருவகை - மற்றோர் வகையான்
நோக்குமிடத்து, கருமம் எல்லாம் - செய்யுஞ் செயல்களெல்லாம், சூழ்பவர் சூழ்ந்து சூழுஞ்
சூழ்ச்சியுள் தோன்றும் - அமைச்சர்கள் ஆராய்ந்துக் கூறும் உபாயத்துள்ளே
தோன்றுவனவாகும். யாழ் பகர்ந்து இனிய தீஞ்செயல் அமிர்தனாரேனும் - யாழிசையைப்
போன்று பேசும் மிகவினிய சொல்லையுடைய அமுதத்தைப் போன்ற மங்கையர்களாக
விருப்பினும், சூழ்ச்சி வாழ்பவர் வல்லர் ஆயின் - சூழ்ச்சித்திறமையுடன் வாழ்வதில்
வல்லவர்களாயின் அவர்கள், மன்னராய் மலர்ப - அரசர்களாகக்கூட விளங்குவார்கள்,
அன்றே - அல்லவோ (எ - று)
அச்சமும் மடனும் மென்மையுமுடைய மகளிரும் அமைச்சர் துணையால் அரசராதல் கூடும்
என அமைச்சர் மாண்பினை உயர்த் தோதுகின்றான்.
ஊழான் வருவன மாந்தர் அறிவுக்கு அப்பாற்படுதலின் அது கிடக்க என்பான் 'ஊழ்வரவு
அன்னதேனும்' என்றான். சூழ்பவர் என்றது அமைச்சர் என்னும் பெயராய் நின்றது; சூழ்ச்சி
வாழ்பவர் என்பதனையும் அமைச்சர் பெயராக்கினு மமையும்.

( 10 )