குறிஞ்சி | 25. | காந்த ளங்குலை யாற்களி வண்டினம் 1கூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ டேந்து சந்தனச் சார லிருங்கைமா மாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம். | (இ - ள்.) வரைமாடு எலாம்-மலைப்பக்கங்களிலெல்லாம்; ஏந்துசந்தனம் சாரல்-உயர்ந்த சந்தனமரங்கள் செறிந்த சாரலில்; இரும்கைமா-பெரிய கையினையுடைய களிறுகள்; களிவண்டு இனம்-தம்மத நீரைப்பருகிக் களிக்கின்ற வண்டுக் கூட்டத்தை; கூந்து இளம்பிடி-கூந்தலையுடைய இளம் பிடியானைகள்; காந்தள் அம்குலையால் வீச-அழகிய காந்தட் பூங்கொத்தினால் வீசியோட்ட; குழாங்களோடு நின்று மாந்தி - மற்றை யானைக் கூட்டத்தோடு சேர்ந்து தினை முதலியவற்றை உண்டு; உறங்கும் - தூங்கும். ஆண் யானைகள் தினை முதலியவற்றைத் தின்றுவிட்டுத் தம் குழாத்துடன் உறங்குகின்றன; அவற்றின் மதநீரில் வண்டுக் கூட்டங்கள் இடைவிடாது மொய்த்துக் களிற்றின் உறக்கத்தைக் கெடுக்கின்றன; வண்டுக் கூட்டங்கள் ஆண் யானைகளின் உறக்கத்தைக் கெடுத்தல் அவற்றின்பால் அன்புள்ள பிடிகளுக்குப் பொறுக்கவில்லை. ஆகவே அவை காந்தளங் குலையினால் வண்டுக்கூட்டத்தை யோட்டி ஆண் யானை உறங்குதற்கு உதவிபுரிகின்றன. இதனால் அப்பிடிகள் களிற்றினிடத்திற் கொண்டுள்ள காதலும் அன்பும் புலனாம். மக்கட்கு அடுத்தபடியாகப் பகுத்தறிவோடுகூடிய விலங்கு யானையாகும். கூந்து-கூந்தல்; மயிர்த்தொகுதிகள் எல்லாவற்றையும் உணர்த்தும். இச்சொல் கூந்தலென்பதன் விகாரம், கைம்மா எனவே யானையை உணர்த்திற்று. விலங்கினுள் யாளியுங் கையுடையதாயினும் குறிஞ்சிக்குரிய யானையையே ஈண்டு உணர்த்தி நின்றது. மேல் சுயம்வரச் சருக்கத்துள் “காந்தளங்கட் கமழ்குலையாற் களிவண்டுகளிறகற்றும் கலிங்க நாடன்“ என்பர். மாந்துதல்-குடித்தல்; உண்ணுதல், களிமாந்தி என இயைத்துக் கள்ளைக்குடித்து என்று உரை கூறினாரும் உளர். | ( 25 ) | | |
|
|