சுச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்

257. பணிந்துமற் 1றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்
துணிந்துதன் புலமை தோன்றச் சுச்சுதன் சொல்ல லுற்றான்
இணைந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற
அணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே.
 

     (இ - ள்.) பணிந்து - அரசனை வணங்கி, ஏனையார் - மற்றவர்கள், பாங்கு இருப்ப
- பக்கத்திலேயிருக்க, இணைந்து நின்று உலவும் தும்பி - ஆணும் பெண்ணுமாய்த் தம்முட்
புணர்ந்திருந்தும் உலவியும் வருகின்ற வண்டுகளாலே, இடை இடை இருண்டு தோன்ற -
நடுவே நடுவே இருண்டு தோன்றா நிற்ப, அணிந்து நின்று அவரும் பைந்தார் -
அழகுசெய்து மலர்கின்ற புதிய மாலையினையும், அணிமணி முடியினாற்கு - அழகிய
மணிகள் பதித்துச் செய்யப்பெற்ற முடியையுமுடைய அரசனுக்கு, சுச்சுதன் - சுச்சுதன்
என்னும் பெயரினையுடைய அமைச்சனானவன், நூல் பலவு நோக்கித் துணிந்து - பல நூன்
முறைகளையும் எண்ணிப் பார்த்து முடிவு செய்து, தன்புலமை தோன்றச் சொல்லலுற்றான் -
தன் அறிவுடைமையானது வெளிப்படுமாறு கூறலானான். (எ - று.)

சூழ்ச்சி மன்றத்தின்கண் ஒவ்வோர் அமைச்சரும் தத்தம் கருத்தினைக் கூறவேண்டியது
கடமையதாலின் இப்பொழுது சுச்சுதன் தன் கருத்தைச் கூறுகிறான்.

( 18 )