அரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்

259. கோணைநூற் றடங்க மாட்டாக் குணமிலார் குடர்க ணைய
ஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே
பேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்
பூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்பவென்றான்.
 

     (இ - ள்.) உருவத்தார்மேல் - அழகிய மாலையின்மீது, பூணும் நூல் பொலிந்து
தோன்றும் பொன்வரை மார்ப! - அணிகின்ற நூலானது விளங்கித் தோன்றும் பொன்மலை
போலும் மார்பை யுடையவனே, கோணை நூற்று - பிறருக்குத் துன்பத்தைச் செய்து,
அடங்க மாட்டாக் குணமிலார் குடர்கள் நைய - கீழ்ப்படிதலற்ற நற்குணமில்லாதவர்களின்
குடர்குழம்பும்படி, ஆணை நூற்று - கட்டளைகளைப் பிறப்பித்து, அடங்கச் சுரக்கும் அரசர்
தம் அருளினால் - எல்லாவற்றையும் ஒருங்கே புரக்கும் அரசர்களுடைய தண்ணளியினால்,
நூல்பேணும் புலவர் மாண்பும் - அறநூல்களைப் போற்றுகின்ற அமைச்சர்களுடைய
பெருமையும்; பெருகுவது என்றான் - வளர்வதாகும் என்று கூறினான், (எ - று.)
புலவர் ஈண்டு அரசியலறிவுமிக்க அமைச்சர்களை உணர்த்தி நின்றது.

சூரியன் ஒளியாலே சூரியகாந்தம் ஒளி கால்வது போன்றே அரசன் அருளாலே
அமைச்சரும் அறிவுரை கூறுந் தகுதியை உடைய வராகின்றனர். ஆதலால் அமைச்சர்
மாண்பிற்கு அரசர் அருளே காரணமாகும் என்று மன்னனைப் பாராட்டிப் பேசியபடியாம்.

( 20 )