இதுவும் அடுத்த செய்யுளும் ஒருதொடர் (இ - ள்.) போழ்கதிர் - இருளைப் பிளக்கும் ஒளியை, பொங்கி பொழிந்து - மிக்கு வெளிப்படுத்தி, புலால் நிணம் பொழியும் வேலோய் - பகைவர் புலாலாகிய ஊனைச் சிந்துகிற வேற்படையை யுடையவனே, கதிர்த் தொழுதி மாலைசூழ் - ஒளிப்பிழம்பின் கூட்ட வரிசையால் சூழப்பெறுகின்ற, சுடர்ப் பிறைக் கடவுள் தோன்றி - வெள்ளிய பிறைத்திங்கள் எழுந்து, தாழ்கதிர் சொரிந்த போழ்தில் - வீழாநின்ற ஒளிப்பிழம்பை வெளிப்படுத்திய காலத்தில், வீழ்கதிர் விளங்கு சந்திரகாந்தம் என்னும் வட்டம் - விழுகின்ற ஒளியானது விளங்குகின்ற சந்திரகாந்தக் கல்லானது, வெள்ளம் நீர் விரியும் - மிகுதியான நீரைப்பொழியும் (எ - று.) அன்றே: அசை. தொழுதி - திரள் - மாலை - ஒழுங்கு; இயல்புமாம். தாழ்கதிர் - வினைத்தொகை. சந்திரகாந்தம் - திங்கள் ஒளிப்பட்ட உடன் நீர்காலு மியல்புடைய தொருகல். |