(இ - ள்.) கண்ணிய கடாத்த வேழம் - பெருமையையுடைய மதம்பொருந்திய யானையினது, கவுளினால் உரிஞப் பட்டும் - கன்னத்தினால் உராய்ந்து தேய்க்கப்பட்டும், தண்ணிய தன்மை நீங்கா - இனிய குணமானது கெடாத, சந்தனச் சாதிபோல - சந்தன மரங்களைப் போல, புண்ணியக்கிழவர் - நல் வினைக்குரியவர்களாகிய அரசர்கள், கீழோர் பிழைத்தன பொறுப்ப ஆயின் - அமைச்சர் முதலிய கீழானவர்கள் செய்த பிழைகளைப் பொறுப்பார்களாயின், மண்இயல் வளாகம் எல்லாம் - மண்திணிந்தமைந்த உலகங்களிலுள்ள உயிர்த்தொகைகளெல்லாம் வழிநின்று வணங்கும் - அவ்வரசன் வழிப்பட்டு நின்று அவனைப் பணியும், (எ - று.) அன்றே; அசை. சந்தனமரங்கள் தேய்ப்புண்ட விடத்தும் சிறந்த மணத்தை வெளிப்படுத்தும். அதனால் சந்தனத்தின் பெருமை வெளியாம். அதனைப் போல் அரசர்கள் சிறியோர்களுடைய பிழைகளை, அஃதாவது இகழ்தல் முதலியவைகளைப் பொறுப்பார்களாயின் உலகத்துயிர்களெல்லாம் அவர்கள் வழிப்பட்டு நிற்கும் என்க. |