அரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்

263. நிறத்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்
இறந்தலை மயங்கு நீர்வா 1ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ?
மறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்
அறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே.
 

     (இ - ள்.) நெடுங்கடல் - நீண்ட பெரிய கடலானது, நிறம் - தன்னுடைய
இயல்பானது, தலைமயங்க - மாறுபாட்டையடைய, வெம்பி - கொதித்து, சுடுவதாயின் -
வருத்துவதானால், இறந்து அலை மயங்கு நீர் வாழ் உயிர்க்கு - மிகுதியாக
அலைகள்பொருந்திய கடலிலே வாழுகின்ற மீன்முதலிய நீர்வாழ் உயிர்களின்,
இடர்-துன்பத்திற்கு, எல்லைஉண்டோ - ஓர் அளவு உண்டாகுமோ? மறம் - வலிமையானது,
தலைமயங்கு - மிகுதியாக அமைந்துள்ள, செவ்வேல் மன்னவன் வெய்யன் ஆயின்
செம்மையான வேற்படையை ஏந்திய அரசனானவன் கொடியவனானால், அறம் -
நன்னிலையானது; தலைமயங்கி - சுழற்சியையடைந்து, வையம் - உலகத்துயிர்கள்,
அரும்படர் உழக்கும் - பொறுத்தற்கரிய துன்பத்தை யடையும் (எ - று.) அன்றே : அசை.

கடல் வெதும்பியவிடத்து அதனில் வாழ் உயிர்த் தொகைகள் யாவும் துன்பத்தை
யடைதலைப்போல், அரசன் தீயவனாயின் உலகத்துயிர்கள் யாவும் கொடிய
துன்பத்தையடையும் என்க.

( 24 )