(இ - ள்.) அந்தரம் திரியுஞ் செய்கை - விண்ணிலே இயங்குதலைச் செய்யும் செயலினையுடைய, அமரர்தம் அரசு வேண்டி - தேவருலக அரசாட்சி விரும்பி, இந்திரவுலகங் காணும் நெறியவை யாவை என்னின் - இந்திரவுலகத்தையடையும் வழிகள் எவைகளோவெனின், மந்திரம்வழாத - மந்திரநெறிகளிலே தவறாத, வாய்மை மாதவம் முயறல் - மெய்ம்மையான சிறந்த தவத்தை முயன்றுசெய்தல், அன்றேல் - இல்லாவிடின், தந்திரம் தழுவி - சூழ்ச்சிமுறையைப் பொருந்தி, செங்கோல் - நெறிதவறாத ஆட்சிமுறையை, தளர்விலன் தரித்தல் என்றான் - தளர்ச்சியடையாதவனாக மேற்கொள்ளுதல் என்று கூறினான். (எ - று.) முறைப்படி அருந்தவம் புரிவோரும் அரசாட்சி புரிவோரும் விண்ணுலக ஆட்சி பெறுவர் என்க. |