செய்திகூறத் தொடங்கும் சுச்சுதன் முன்னுரைக்கு
அடக்கங் கூறல்

276. 1கொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து
முற்றுநன் றுருவு கொண்ட 2மூர்த்திநின் முன்னர் யாங்கள்
இற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்
கற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே.
 

     (இ - ள்.) கொற்றவேல் மன்னர்க்கு ஓதும் - வெற்றியையுடைய வேற்படையைத்
தாங்கிய அரசர்கட்குச் சொல்லப்பெறும், குணம் எலாம் குழுமி வந்து -
நற்குணங்களெல்லாம் ஒன்றாகக்கூடி வந்து, முற்றும் நின்று உருவுகொண்ட மூர்த்தி -
அவைகளெல்லாம் ஒரு வடிவத்தை யெடுத்தாற்போல் அமைந்து விளங்கும் உருவை
யுடையவனே! நின்முன்னர் யாங்கள் இற்றென உரைக்கும் நீதி - உனக்கு முன்னர் நாங்கள்
இச்செயல் இத்தன்மையோடு கூடியது என்று சொல்லும் அறமானது, ஓதுநூல் எல்லை
காணக் கற்றவர்முன்னை - சொல்லப்பெறுகிற பல நூல்களின் முடிவையும் நன்குணருமாறு
கற்றவர்கட்குமுன்பு, ஏனோர் கதை ஒத்துகாட்டும் - கல்லாதவர்கள் பேசும் பேச்சை
ஒத்துமுடியும் (எ - று.) அன்றே, அசை.

எல்லா மாண்புகளும் இனிது நிறைந்த நின் முன்னர் யாங்கள் கூறுவன அறிஞர்மாட்டு
அறிவிலார் கூறும் பொருளில் உரையைப் போல் பயனிலவாம் என்க.

மன்னர்க்கோதுங் குணமாவன. அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவுடைமை, மறனிழுக்கா மானம் முதலியன.

( 37 )