(இ - ள்.) பஞ்சுஆர் அகல்அல்குல் பாவையர் - துகில் பொருந்திய அகன்ற அல்குலையுடைய கொல்லிப்பாவை போன்ற மங்கையர்களின், பூண்முலைச் செஞ்சாந்து அணிந்து திகழ்ந்த மணிவண்டு - அணிகலன்களையணிந்த கொங்கைகளினிடத்துப் பூசப்பெற்ற செவ்விய சந்தனக்குழம்பில் படிந்து அச்சாந்து மேலே யமையப்பெற்று விளங்கிய அழகிய ஆண்வண்டானது, மஞ்சு ஆர் பொழிலுள் - முகில்கள்படியும் பொழில்களினிடத்திலே, வளர்பெடை கண்டு - தங்கியிருந்த தன் பெட்டைவண்டைப் பார்த்து, அதற்கு அஞ்சா ஒளிக்கும் - அப் பெட்டைவண்டுக்கு அஞ்சி யொளிக்கும், மயலது அது - ஒரு மயக்கத்தையும் உடையது அந்த நகரம், (எ - று.) ஆண்வண்டு அஞ்சுதற்குக் காரணம் செஞ்சாந்தணிந்து திகழ்கின்றமையே என்க. செஞ்சாந்தினால் பெடை ஆணிடத்தில் ஊடல் கொள்ளுதற்கு இடமிருத்தலைக் காண்க. |