அச்சுவக்கிரீவன் அரசு எய்திய பின் உலகம் முற்றும்
அவனடிப்பட்டது.

297. அதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்
பொதியவிழ1 பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி
யெய்தி
மதிதவழ் குன்ற மெல்லாம் வணங்கிய பின்றை 2மண்ணும்
கொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே.
 

     (இ - ள்.) அதிர்கழல் - ஒலிக்கின்ற வீரக்கழலை யணிந்த அடிகளையும், அலங்கல்
வேலோய் - மாலையணியப்படட வேற்
படையையுமுடைய அரசனே! அச்சுவக்கிரீவன் என்னும் - அச் சுவக்கிரீவனென்று பெயர்
சொல்லப்பெறுகிற, பொதி அவிழ் பொலம்கொள் பைந்தார்ப் புரவலன் - கட்டவிழ்ந்து
அழகினைக்கொண்ட பசியமாலையை யணிந்த அவ்வரசன், திகிரி எய்தி -
ஆணையுருளையை (ஆக்ஞாசக்கரம்) அடைந்து, மதி தவழ்குன்றம் எல்லாம்
வணக்கியபின்றை - திங்கள் தவழும் வித்தியாதர மலையரசர்களனைவரையுங் கீழ்ப்படியச்
செய்த பிறகு, மண்ணும் - மண்ணுலகமும், கொதி தவழ் வேலினான்றன் - கொடுமை
மிகுந்த வேற்படையையுடைய அச்சுவக்கிரீவனின், குறிப்பொடு கூடிற்று -
கட்டளையின்படியே நடக்கலாயிற்று, அன்றே: அசைநிலை. (எ - று.)

அச்சுவக்கிரீவன் அரசனாகிய பிறகு மண்ணுலகமும் அனுடைய ஆட்சிக்கு உட்பட்டதாயிற்று
என்று இதனால் உணர்த்தப்பட்டது.

“பொன்னென்கிளவி ஈறுகெட முன்னர்த் தோன்றும் லகார மகாரம்“ என்பதானால் பொன்
என்னும் சொல் பொலம் என்று ஆயிற்று.

( 59 )