அச்சுவக்கிரீவன் தன்னிகரற்ற தனி மன்னன்

298. சுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்
கொற்றமாங் குடைமை யாலுங் கலத்தது பெருமை யாலுங்
கற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்
வெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே.
 

      (இ - ள்.) வேந்தே - அரசே! சுற்றம் மாண்புடைமையாலும் - அவனுக்கு உறுதிச்
சுற்றமாயமைந்தவர்கள் பெருமையையுடையவர் களாகையாலும், சூழ்கதிர்த் திகிரியாளும்
கொற்றம் ஆங்கு உடைமையாலும் - புகழ்பாவிய ஆணையுருளையை யுருட்டும் வெற்றி
மிகவும் அமைந்திருப்பதாலும், குலத்தது பெருமையாலும் - நற்குலத்தில் தோன்றிய
சிறப்பினாலும், கற்ற மாண் விஞ்சையாலும் - பயின்றுள்ள பெருமை பொருந்திய
வித்தையாலும், கருதிய முடித்தலாலும் எண்ணியவற்றை எண்ணியாங்கே இனிது
முடித்தலாலும், வெற்றிவேல் அவனோடு ஒப்பார் வேந்தர் - வெற்றி வேற்படையையுடைய
அச்சுவக்கிரீவனோடு நிகரான அரசர்கள், மற்று இல்லை - வேறு ஒருவரும் இலர்,
( எ - று.)

உறுதிச் சுற்றம் முதலிய எல்லாவற்றானும் அச்சுவக்கிரீவன் சிறந்தவன் என்பது இதனால்
உணர்த்தப்பட்டது. சுற்றம் ஐம்பெருங்குழுவும் எண்பேரா யமும்; உரிமைச் சுற்றமுமாம்.
கொற்றம் - அரசுரிமையுமாம். குலத்தது; அது: பகுதிப் பொருளது. வெற்றிவேலவன் -
அச்சுவக்கிரீவன்.

( 60 )