(இ - ள்.) அவ்வச்சுவக்கிரீவனுக்கு, அரிமஞ்சு - அரிமஞ்சு என்னும் பெயரையுடையவன், ஆணைநூல் அமைச்சன் ஆவான - அறநூல்களை நன்குணர்ந்த அமைச்சனாக அமைந்திருக்கின்றான், அவனது ஆற்றல் - அவனுடைய வலிமையானது எத்தன்மையது என்றால், கோணை நூற்பவரை - கொடுமைகளைச் செய்பவர்களை, தன்சொல் குறிப்பின்மேல் நிறுத்த வல்லான் - தன் சொல்லின் வழியே நிற்குமாறு செய்யக் கூடியவன், மற்றும், பேணும் நூல் நிமித்தம் வல்லான் - அவனுக்கு முக்காலமு முரைக்கும் நிமித்திகனாக அமைந்துள்ளவன் எல்லோரும் போற்றும் நிமித்த நூலிலே ஆற்றலையுடையவன். சதவிந்து - சதவிந்து என்னும் பெயரினையுடைவன், பெரிய நீரான் - அவன் முக்காலமுங்கூறும் பேராற்றல் அமையப் பெற்றவன், காணும் நூற்புலமை - அவனறிந்துள்ள நிமித்த நூல் அறிவை, யாரும் காண்பவர் இல்லை - யாரும் இவ்வளவென்று அளந்தறிபவர் இலர், கண்டாய் - தெரிந்துகொள்வாயாக, (எ - று.) இச்செய்யுளால் அச்சுவக்கிரீவனுடைய அமைச்சன் திறமும் சோதிடன் திறமும் கூறப்பட்டன. அறிவு நலம் செறியப்பெற்ற அமைச்சனையும் நிமித்திகனையும் துணையாகவுடையவன் எதற்கும் அஞ்சான் என்பது குறிப்பு. |