இரத்தின கண்டன் இளவரசன்

316. வானோ ருட்கு மக்களொ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்
ஈனோ ருட்கு மிரத்தின கண்ட னென நின்றான்
ஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்
ஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்.
 

     (இ - ள்.) ஊனோம் உட்கும் - ஊன் பொருந்திய உடலையுடை யவர்கள்
அச்சத்தையடையும்; ஒண்சுடர் நஞ்சு ஊறு ஒளி வேலோய் - மிக வருத்தத்தைச் செய்யும்
நஞ்சில் தோய்க்கப்பெற்று ஒளியுடன் விளங்கும் வேற்படையை யுடையவனே, வானோர்
உட்கும் - விண்ணுலகத்தவரும் கண்டு அச்சத்தையடையும், மக்கள் ஓர் ஐஞ்ஞூற்றுவர்
தம்முள் - புதல்வர்கள் ஓர் ஐந்நூறு பெயர்களுக்குள், ஈனோர் உட்கும் - ஈண்டுள்ள
வித்தியாதரர்கள் அச்சத்தையடையும், இரத்தின கண்டன் என நின்றான் - இரத்தின
கண்டன் என்று பெயரமைந்தவன், ஏனோர் உட்கும் - அசுரர் தயித்தியர் முதலிய
மற்றவர்கள் அஞ்சும், இன் இளவேந்தாய் இயல்கின்றான் - இனிய இளவரசனாக
விளங்குகின்றான். (எ - று.)

இதனால் பவச்சுதன் அச்சுவக்கிரீவன் அகவை முதிர்ந்தமையை மக்களுண்மை கூறுமாற்றாற்
கூறி, மேலும் அச்சுவக்கிரீவன் மகன் இவட்குக் கணவனாதல் கூடுமென்று குறிப்பாகக்
கூறுகின்றான

( 78 )