வேறு
இதுமுதல் 329 ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்; பவச்சுதன்கூற்று.
பவனஞ்சன் மாண்பு

319. கேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்
தோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்
பாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்
தாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான்.
 

     (இ - ள்.) கேடுஇல் - எவ்விதமான தீமையும் இல்லாத, இம்மலையின் மேல் - இந்த
மலையின்மேலுள்ள கின்னரகீதம் ஆளும் - கின்னரகீதம் என்னும் வித்தியாதர நகரத்தை
யரசாட்சி செய்யும், தோடு இலங்கு உருவத்தொங்கல் - இதழ் விளங்குகின்ற அழகிய
பூமாலையை யணிந்த, சுடர்முடியரசன் செம்மல் - ஒளி விளங்குகின்ற முடியைத் தாங்கிய
அரசனுடைய தலைமகனும், பாரித்து - மிகுத்து, ஆடல் அம் புரவி வல்ல - ஆடுதலில்
சிறந்த அழகிய குதிரையைச் செலுத்துதலிற் சிறந்த, அரசிளங் குமரன் - அரசிளங்
குமரனுமாகி யிலங்குபவன், பாடல் வண்டு இமிரும் பைந்தார்ப் பவனஞ்சன் - இசை
பாடுதலையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற பசிய மாலையை யணிந்த பவனஞ்சன் என்னும்
பெயரையுடையவன், என்ப - என்று கூறுவார்கள், என்றான் - என்று கூறினான், (எ - று.)

கின்னரகீதம் - விஞ்சையர் நகரத்துள் ஒன்று. செம்மல் - ஈண்டு மகன் என்னும் முறைப்
பெயர் மேனின்றது.

( 81 )