நெய்தல்

32. சங்கு நித்தில முந்தவ ழிப்பியும்
தெங்கந் தீங்குலை யூறிய நேறலும்
வங்க வாரியும் வாரலை வாரியும்
தங்கு வாரிய தண்கட னாடெலாம்.
 
     (இ - ள்.) சங்கு நித்திலமும்-வலம்புரிச் சங்கு ஈன்ற முத்துக்களும்; தவழ்
இப்பியும்-தவழ்ந்துசெல்லும் இப்பியிற் பிறந்த முத்துக்களும்; தெங்கு அம்தீம்குலை ஊறிய
தேறலும்-தென்னையின் அழகிய இனிய பாளையில் ஊறிய கள்ளும்;
வங்கவாரியும்-மரக்கலங்களின் மூலமாகப் பிறநாடுகளிலிருந்து வரும் பண்டங்களும்;
வார்அலை வாரியும்-நீண்ட கடலிடத்தே உண்டாகும் பொருள்களும் ஆகிய; தண்கடல்
நாடுஎலாம்-குளிர்ந்த நெய்தல்நிலம் முற்றும்; தங்குவாரிய-நிலைபெற்ற வருவாய்களை
யுடையனவாகும் (எ - று.)

தேறல்-தெளிந்த இளநீர் எனினுமாம். சங்கு முதலியன நெய்தல்நிலத்து வளங்கள்.
மூன்றாவதடி முற்றுமோனையாக அமைந்திருக்கிறது.

வலம்புரி முத்துக்களும், இப்பிமுத்துக்களும், தென்னங்கள்ளும், மரக் கலங்களின் மூலமாகப்
பிற நாடுகளில் இருந்துவரும் பொருள்களும் கடலில் உண்டாகும் பொருள்களும்
நெய்தல்நிலத்தில் மிகுந்துள்ளன என்க.

( 32 )