(இ - ள்.) உருவத்தாரோய் - அழகிய மாலையை யணிந்தவனே!, வேழத்தால் - கரும்பினாலே, பொலிந்த சோலை - விளக்கமடைந்த சோலைகளாலே சூழப்பெற்ற, மேகமாபுரமதாளும் - மேகபுரத்தினை யரசாட்சி செய்கின்ற, ஆழித்தேர் அரவத்தானை அரசர்கோன் புதல்வன் - உருளை பொருந்திய தேரையும், ஒலி பொருந்திய படையையுமுடைய அரசர்கோனுடைய மகனாகிய, அம்தார் பாழித்தோள் - அழகிய மாலையை யணிந்த பருத்த தோள்களையும், உருவச் செங்கண் - அழகிய சிவந்த கண்களையுமுடைய, பதுமத்தேர்ப் பெயரினானை - பதுமரதன் என்னும் பெயரையுடையவனை, வேந்தர் - அரசர்கள், ஊழித்தீ என்று உட்குவது - உலகம் முழுமையையும் அழிக்குந் தீயென்று அஞ்சுவர், (எ - று.) இவ்வாறு இயம்பவே இந்தப் பதுமரதன் என்பானும் தக்கார்களில் ஒருவன் என்பது பெறப்பட்டது. |