விச்சுவன் பெருமை

339. மையில் வானுல காண்டுமண் ணோர்களுக்
குய்யும் வாயி லுணர்த்திய தோன்றிய
ஐய னாற்பிற வாரஞர் நீங்கியிவ்
வைய மாயதெல் லாம்வளர் கின்றதே.
 

     (இ - ள்.) மையில் வான்உலகு ஆண்டு - குற்றமில்லாத தேவருல கத்தை
அரசாட்சிசெய்து, மண்ணோர்களுக்கு உய்யும் வாயில் உணர்த்திய தோன்றிய ஐயனால் -
மண்ணுலகத்தவர்களுக்குப் பிழைக்கும் வழியை உணர்த்துமாறு தோன்றிய அந்த
விச்சுவனால், இவ்வையம் ஆயது எல்லாம் - இவ்வுலகமானது முற்றும், பிற ஆரஞர் நீங்கி
- மற்றைய நிறைந்த துன் பங்கள் ஒழிந்து, வளர்கின்றது - மேன்மேலுஞ்
சிறந்தோங்குகின்றது, (எ- று.)

அந்த விச்சுவனால் உலகத்தினர் துன்பம் நீங்கிச் சிறந்தோங்கு கின்றனர் என்க.

( 101 )