திணைமயக்கம் (ஒலி)

34. கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.
 
     (இ - ள்.) கலவர்தம் சிறுபறை இசையின்-மரக்கலமோட்டும் பரத வருடைய
சிறுபறையின் ஒலியால்; கைவினைப்புலவர்-உழுது பயிர் செய்தலாகிய கைத்தொழிலில்
தேர்ச்சியையுடைய மருதநிலத்து மக்களது: தேம்பிழிமகிழ் குரவைபொங்கும்-இனிய
கள்ளையுண்டதனாற் களித்தாடுகின்ற குரவைக் கூத்துச் சிறப்பையடையும்; குலவுகோல
கோவலர்-வளைந்த கோலையுடைய இடையர்களுடைய; கொன்றை தீம்குழல்-முதிர்ந்த
கொன்றைக் காயினாலாகிய இனிய குழலினது இசையால்; உலவுநீள் அசுணமா
உறங்கும்-குறிஞ்சிநிலத்தில் உலவுகிற அசுணமா துயில்கொள்ளும். (எ - று.)

( 34 )