சுரமை நாட்டின் சிறப்பு | 35. | மாக்கொடி மாணையு மௌவற் பந்தரும் கார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப் பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும் தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. | (இ - ள்.) மாக் கொடி மாணையும்-கருங்கொடியாகிய மாணைக் கொடியும்; மௌவல் பந்தரும்-காட்டு மல்லிகைக் கொடியின் பந்தரும்; கார்க்கொடி முல்லையும்-கார்காலத்து மலர்கின்ற முல்லைக்கொடிகளும்; மல்லிகைப் பூக்கொடி பொதும்பரும்-மல்லிகைப் பூங்கொடிகளின் தொகுதியும்; பொன்ன ஞாழலும்-பொன்னிற மலர்களையுடைய புலிநகக் கொன்றையும்; (ஆகிய இவற்றின் மலர்கள் ஒன்றாய்க் கலந்து) தூகடி-தூய நறுமணம்; கமழ்ந்து-கமழப்பெற்று; துறக்கம் ஒக்கும்-அச்சுரமைநாடுதேவர் உலகை நிகர்க்கும். (எ - று.) தான்; அசை. மா - கருமை. மாணை மாக்கொடி என்றவாறு. இது குறிஞ்சிக் கருப்பொருள். முல்லை - முல்லைக் கருப்பொருள். மல்லிகை - மருதம் என்க. ஞாழல்-நெய்தற் கருப்பொருள். இதுவும் நானிலமயக்கம் கூறியவாறுணர்க. | ( 35 ) | | |
|
|