(இ - ள்.) வீழ்புரி விளங்கும் நூலோய் - மார்பின் கண்ணே குறுக்காக வீழ்ந்துகிடக்கும் முறுக்கமைந்த பூணூலை அணிந்த மன்னனே!, மேலும் - இன்னுங் கூறுமிடத்து, நங் குலத்துளார்கட்கு - நம்முடைய அரசவழியிலே தோன்றியவர்கட்கு, ஊழ்புரிந்து - ஊழினது செயலை முன்னரே யுணர்ந்து, உறுதி கூறும் - உறுதியானவைகளை யுரைப்பவனும், உயர் குலம் மலரநின்றான் - உயர்ந்த நம்முடைய அரசகுலம் தழைக்குமாறு ஆவனபுரிபவனும், தாழ்புரி தயங்கும் நுண்ணூற் சதவிந்து - பூணூற் புரியானது விளங்கப்பெற்றவனும் நுண்ணிய நூலறிவு அமைந்தவனுமாகிய சதவிந்து நிமித்திகனை வினாவி, மொழிந்த ஆற்றல் - அவன் கூறிய வழியாலே, யாழ்புரி மழலையாள் கண் - யாழிசை போலும் மழலைச் சொற்களை மொழியும் சுயம்பிரபையிடத்தே, ஆவதை அறிதும் என்றான் - ஊழானே இனி நிகழவிருக்குஞ் செய்தியை உணர்ந்து கொள்ளுவோம் என்று கூறினான் (எ - று.) “நங்குலத்தினர்க்கு நிகழ்வதுரைப்பவன் சதவிந்து, அவனிடம் செய்தியைத் தெரிவித்து அவன் கூறுகிறபடி செய்வோம்“ என்று கூறி முடிக்கிறான். |