அமைச்சர்கள் அரசனை அவையைக்
கலைக்குமாறு கூறுதல்

361. இந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா
மந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா
சந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி
அந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார்.
 

     (இ - ள்.) இந்திரன் அனைய நீரோய் - இந்திரனையொத்த தன்மையை
யுடையவனே! இனிப் பிறிது எண்ணல் வேண்டா - மேலே வேறொன்றையும்
ஆராய்தல்வேண்டாம், மந்திரம் நீளுமாயின் - அமைச்சர்களோடு கலந்தெண்ணப் பெறும்
சூழ்ச்சியானது நீட்டிக்குமானால், வருவன அறியல் ஆகா - குழப்பமுண்டாகி மேல்வருஞ்
செயல்களை அறிதலியலாது, ஆகையால்; சந்திரன் தவழ நீண்ட - திங்கள்படியுமாறு
உயர்ந்துள்ள, தமனியச்சூலம் - பொற்சூலத்தை, நெற்றி - முடியினிடத்திலே கொண்டு,
அந்தரந் திவளும் ஞாயில் - வானத்தையளாவும் மதில்பொருந்திய, கோயில் புக்கு அருளுக
என்றார் - அரண்மனைக்குச் சென்றருள்க என்று கூறினார்கள் (எ - று.)

மேலே ஆகவேண்டியவைகளை அரசன் விரைந்து புரியவேண்டும் என்னும்
நோக்கத்துடனும், மேலும் ஆராய்ச்சிக்குழு நீளின் மேலும் எவரேனும் வேறு எண்ணங்களை
வெளியிட்டு முடிவை மாற்றச் செய்தல் கூடுமாதலினானும் “மந்திரநீளு மாயின் வருவன
வறியலாகா“ என்றனர்.

( 123 )