(இ - ள்.) இந்திரன் அனைய நீரோய் - இந்திரனையொத்த தன்மையை யுடையவனே! இனிப் பிறிது எண்ணல் வேண்டா - மேலே வேறொன்றையும் ஆராய்தல்வேண்டாம், மந்திரம் நீளுமாயின் - அமைச்சர்களோடு கலந்தெண்ணப் பெறும் சூழ்ச்சியானது நீட்டிக்குமானால், வருவன அறியல் ஆகா - குழப்பமுண்டாகி மேல்வருஞ் செயல்களை அறிதலியலாது, ஆகையால்; சந்திரன் தவழ நீண்ட - திங்கள்படியுமாறு உயர்ந்துள்ள, தமனியச்சூலம் - பொற்சூலத்தை, நெற்றி - முடியினிடத்திலே கொண்டு, அந்தரந் திவளும் ஞாயில் - வானத்தையளாவும் மதில்பொருந்திய, கோயில் புக்கு அருளுக என்றார் - அரண்மனைக்குச் சென்றருள்க என்று கூறினார்கள் (எ - று.) மேலே ஆகவேண்டியவைகளை அரசன் விரைந்து புரியவேண்டும் என்னும் நோக்கத்துடனும், மேலும் ஆராய்ச்சிக்குழு நீளின் மேலும் எவரேனும் வேறு எண்ணங்களை வெளியிட்டு முடிவை மாற்றச் செய்தல் கூடுமாதலினானும் “மந்திரநீளு மாயின் வருவன வறியலாகா“ என்றனர். |