அரசன் நடந்து செல்லுதல்

375. பொன்னவிர் மணிக்கழல் புலம்பத் தேனினம்
1துன்னலர் தொடையலிற் சுரும்பொ டார்த்தெழ
மன்னவ னடத்தொறு மகர குண்டலம்
2மின்மலர்ந் திலங்குவில் விலங்க விட்டவே.
 

     (இ - ள்.) பொன் அவிர் மணிக்கழல் புலம்ப - பொன்னைப்போல் விளங்குகின்ற
அழகிய வீரக்கழல் ஒலிக்கவும், தேன் இனம் - பெண்வண்டுக் கூட்டங்கள், துன்அலர்
தொடையலில் - நெருங்கிய மலர்கள் பொருந்திய மாலையில், சுரும்பொடு ஆர்த்துஎழ -
ஆண்வண்டுகளுடனே ஆரவாரித்து எழவும், மகரகுண்டலம் - மகரமீன் வடிவாகச்
செய்யப்பட்ட காதணிகள், மன்னவன் நடத்தொறும் - அரசன் நடக்கும்பொழுதெல்லாம்,
மின் மலர்ந்து இலங்குவில் - மின்னலைப்போல அமைந்து விளங்குகிற ஒளியை, இலங்க
விட்ட - நன்கு காணப்பெறுமாறு வெளிப்படுத்தின (எ - று.)
மன்னவன் நடந்து செல்லும்போது மகர குண்டலங்கள் ஒளிவிட்டன என்க.

( 137 )