மெய்க்காவலர் வேந்தனைச் சூழ்தல்

376. நெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்
கையிலங் கீட்டியர் கழித்த வாளினர்
மெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்
வையகங் காவலன் மருங்கு சுற்றினார்.
 

     (இ - ள்.) வையகங் காவலன் மருங்கு - உலகத்தைப் பாதுகாப்பவனாகிய சுவலனசடி
அரசனின் பக்கத்திலே, நெய் இலங்கு எஃகினர் - நெய் தடவப்பெற்ற வேற்படையை
ஏந்தியவர்களும், நிறைந்த விஞ்சையர் - நிரம்பிய மந்திரங்களையுடையவர்களும்,
கைஇலங்கு ஈட்டியர் - கையிலே விளங்குகின்ற ஈட்டியை உடையவர்களும், கழித்த
வாளினர் - உறையினின்று நீக்கப்பெற்ற வாட்படையை ஏந்தியவர்களும், மெய் இலங்கு
உறையினர் - உடலிலே விளங்குகின்ற சட்டையை அணிந்தவர்களும், விசித்த கச்சையர் -
அரையிலே கட்டப்பெற்ற கச்சையை உடையவர்களுமாகிய மெய்காப்பாளர்கள், சுற்றினார் -
சூழ்ந்து சென்றார்கள் (எ - று.)

அரசன் யாண்டுச் செல்லினும் காவல் இன்றியமையாததாகலின், நிமித்திகன் மனைக்குச்
செல்லும்போதும் பாதுகாத்துச் செல்லுகின்றனர் என்க.

( 138 )