அரசன் நிமித்திகன் வாயிலையடைதல்

377. சுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்
கரும்புசூழ் 1கிளவியர் சொரிந்து கைதொழ
நிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை
அரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்.
 

     (இ - ள்.) அரும்புசூழ் தெரியலான் - அரும்புகளைச் சூழவமைத்துக் கட்டப்பெற்ற
மாலையையணிந்த அரசன், கரும்புசூழ் கிளவியர் - கரும்பினது இனிமையானது
அமையப்பெற்ற சொற்களையுடைய மங்கையர், சுரும்புசூழ் பிணையலும் - வண்டுகள்
மொய்க்கப்பெற்ற மாலையையும், சுண்ணமாரியும் - நறுமணப் பொடிகளின் மழையையும்,
சொரிந்து கைதொழ - மிகுதியாகப் பெய்து கையெடுத்து வணங்க, நிரம்பு நூல் நிமித்திகன்
- சோதிட நூற்புலமை நிறைந்த சதுவிந்துவினுடைய, மாட நீள்கடை - வீட்டின் நீண்ட
வாசலை, அருளின் எய்தினான் - அன்போடு அடைந்தான் (எ - று.)

( 139 )