அரசன் மண்டபத்தை அடைதல்

379. கொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்
விண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்
வண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்
மண்டப மணித்தல மன்ன னெய்தினான்.
 

     (இ - ள்.) மன்னன் - அரசன், கொண்டு அமர்ந்து - நிமித்திகன் கூறிய
வாழ்த்துரையை மனமுவந்து கொண்டு விருப்பத்துடன், அகில்புகை கழுமி - அகில்புகை
நிரம்பி, கோதைவாய் விண்டு - மாலையின் மலர்கள் நன்குவிரிந்து, மதுக்கள் அமர்ந்து
ஒழுகுவ - தேன்துளிகள் நெருக்கமாகச் சிந்துவனவற்றின் மேல், வண்டு அமர்ந்து வீழ்ந்து
உராய் ஒலி செய - வண்டுக்கூட்டங்கள் விரும்பி உலாவி முரலாநிற்பக் காரணமான,
மருங்குல் கொண்டது ஓர் மண்டபமணித்தலம் எய்தினான் - பக்கங்களையுடையதாய்
அமைந்துள்ள மண்டபத்தின்கண் அழகிய ஓர் இடத்தை அரசன் சேர்ந்தான் (எ - று.)

( 141 )