அகழியும் மதிலரணும் | 38. | செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும் மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத் தஞ்சுட ரிஞ்சி, யாங்கோ ரகழணிந் தலர்ந்த தோற்றம் வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே. | (இ - ள்.) செம்சுடர் கடவுள் - சிவந்த ஒளியையுடைய கதிரோனது; திண்தேர் இவுளி - வலிய தேரிற்பூட்டப் பெற்ற குதிரைகள்; கால் திவள ஊன்றும் - தமது கால்கள் மெலியும்படி ஊன்றி ஏறுதற்கிடமாய்; மஞ்சுஉடை மதர்வை நெற்றி - முகிலை இடையிலே உடைக்கின்ற அழகிய முடிகளையும்; வான் உழு வாயில் மாடத்து - விண்ணைக் கீறுகின்ற கோபுரங் களையுமுடைய; அம் சுடர் இஞ்சி - அழகிய ஒளியை உடைய மதில்; ஆங்கு ஓர் அகழ் அணிந்து அலர்ந்த தோற்றம்-அவ்விடத்தே ஒப்பற்ற அகழியாற் சூழப்பெற்று விளங்குகின்ற காட்சி; முந்நீர் - கடலிடையே; வெஞ் சுடர் விரியும் வேதிகை-வெம்மையான ஒளிகள் பரவப்பெற்ற ஒரு மேடை யை; மீது இட்டன்று - மேலாக அமைத்து வைத்ததைப் போன்றது, (எ - று.) இது மதிலின் உயர்வு தோன்றுமாறு அமைந்து நிற்கின்றதாகலின் தொடர்புயர்வு நவிற்சியணி. மதில் அகழியாற் சூழப்பெற்று வானளாவிய மாடங்களுடன் இலங்குங் காட்சி, கடலினிடத்தே ஒரு திண்ணையமைத்து வைத்தாற்போல விளங்குகின்றது என்க. அகழிக்குக் கடலும், மதிலுக்கு அதனிடையே அமைத்த சுடர்வேதிகையும் உவமைகள். வேதிகை - மேடை. வெஞ்சுடர் விரியும் வேதிகை எனக் கூட்டுக. | ( 3 ) | | |
|
|