அரசன் தான் வந்த காரியத்தை எண்ணுதல்

380. தழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது
மழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்
துழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்
குழையவன் குமரிதன் கரும மெண்ணினான்.
 

     (இ - ள்.) தழைஅவிழ் சந்தனப் பொதும்புபோல் - தளிர்கள் நிறைந்து
விளங்குகின்ற சந்தன மரங்கள் செறிந்த பொழிலைப்போல, மதுமழை தவழ் மண்டபம் -
தொங்கவிடப் பெற்றுள்ள மலர் மாலைகளினின்றும் தேன் மழையானது சொரிகின்ற
மண்டபம், மலிர வீற்றிருந்து - விளக்கம் அடையுமாறு அமர்ந்திருந்து, உழையவர் -
அண்மையில் இருப்போர், குறிப்பறிந்து அகல - அரசன் நிமித்திகன் ஆகியவர்களின்
உள்ளக்குறிப்பை முகத்தினால் ஒருவாறுணர்ந்து அவ்விடத்தைவிட்டு நீங்க, ஒண்சுடர்க்
குழையவன் - பேரொளி தங்கிய காதணியை அணிந்த சுவலனசடி அரசன், தன்
குமரி கருமம் எண்ணினான் தன் மகளாகிய சுயம்பிரபையின் திருமணச் செயலைப்பற்றி
மனதினிடத்தே நினைத்தான் (எ - று.)

அரசன் குறிப்பையும் நிமித்திகன் குறிப்பையும் ஏவலாளர்கள் உணர்ந்து, இருவரையும்
தனியாக விட்டு விலகிச் சென்றனர். அரசன் தான்வந்த காரியத்தைப்பற்றி எண்ணமிட்டுக்
கொண்டிருந்தான் என்றபடி. நிமித்திகன் பிறர் நினைத்ததையுணர்ந்து கூறுபவன் ஆதலின்
மன்னன் கருத்தின் எண்ணினான் என்க.

( 142 )