சதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சியடைதல்

386. அம்மயி லனையவ டிறத்தி னாரியன்
செம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்
மெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்
பொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்.
 

     (இ - ள்.) பொய்ம்மை இல் புகழ் அவன் - மெய்ம்மையான புகழை யுடையவனாகிய
சுவலனசடியரசன், அம்மயில் அனையவள் திறத்தில் - அழகிய மயிலையொத்தவளாகிய
சுயம்பிரபையின் செயலில், ஆரியன் - மேலானவனாகிய நிமித்திகன், செம்மையில்
விளம்பிய - சிறப்பாகக் கூறிய, செல்வம் கேட்டலும் - பெருமையமைந்த மொழிச்
செல்வத்தைக்கேட்ட அளவில், மெய்ம்மையில் தெரிந்து - நிமித்திகன் கூறியமொழி
உண்மையாகவே இருக்கவேண்டுமென்பதை யுணர்ந்து, ஒளி துளும்பும் மேனியன் -
விளக்கம் நிறைந்த உடலையுடையவனாய், பொலிந்து தோன்றினான் - மகிழ்ச்சி மிகுந்து
காணப்பட்டான் (எ - று.)

மிகுந்த நன்மையை உண்டாக்கும் மொழியும் செல்வம் போன்ற தாகலின் விளம்பிய
செல்வம் என்றார். “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம், செல்வத்துள்
எல்லாம் தலை“ என்று திருவள்ளுவர் கூறுதலும் காண்க.

( 148 )