பரதன் என்னும் அரசன்

397. ஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய
வீங்கிய விரிதிரை வேலி காவலன்
ஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்
பாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே.
 

     (இ - ள்.) அவன் திருவருள் அலரச்சூடிய - அந்த அருகக் கடவுளுடைய
திருவருளை மிகத்தாங்கிய, வீங்கிய விரிதிரை வேலி காவலன் - பெரிய கடலாலே
சூழப்பெற்ற உலகத்தைப் பாதுகாப்பவனான, பாங்கு உயர்பரிதி வேல் பரதன் - பண்புயர்ந்த
ஒளிவேலையுடைய பரதன் என்பவன், ஓங்கிய நெடுங்குடை ஒருவன் ஆயினான் - புகழால்
உயர்ந்த நெடிய ஒருகுடை நிழற்றும் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தனன், என்ப - என்று
உலகினர் கூறுவார்கள் (எ - று.)

பரதன் என்பவன் திருவருள் பெற்றவனாகவும், சக்கரவர்த்தியாகவும் ஆயினான் என்றபடி.
பரதன் சக்கரவர்த்திகள் பன்னிருவருள் முதல்வன். அவன் திருவருள் அலரச்சூடிய என்றது
ஒருவன் ஆதற்குக் குறிப்பேதுவாய் நின்றது. விரிதிரைவேலி - உலகம். ஓங்கிய
நெடுங்குடை என்றது - பலகுடை நீழலும் தன்னீழலிற் கொண்ட ஒற்றைவெண்
கொற்றக்குடை என்பதுபட நின்றது. எனவே, சக்கரவர்த்தி ஆயினான் என்றாராயிற்று.

( 159 )