பிறகு அவன் கடவுள் ஆவன் என்றல்

403. தேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்
ஆரணி யறக்கதி ராழி நாதனாம்
பாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்
சீரணி திருமொழித் தெய்வத் தேவனே.
 

      (இ - ள்.) சீர் அணி திருமொழித் தெய்வத் தேவன் - சிறப்புப் பொருந்திய
திருவாய் மொழிகளையுடைய தேவ தேவனாகிய அருகக் கடவுள், பார்அணி பெரும்புகழ்ப்
பரத - உலகத்திலே அழகாக விளங்கும் பெரிய புகழையுடைய பரதனே! தேர் அணி
கடற்படைத் திவிட்டன் சென்று - தேர் முதலியவைகளைக்கொண்ட அழகிய
கடலைப்போன்ற படையையுடைய அத் திவிட்டனானவன் போய், பின் ஆர் அணி
அறக்கதிர் ஆழி நாதனாம் என்றனன்-பிற்பாடு ஆர்க்கால்களையுடைய ஒளி தங்கிய
அறவாழியை ஏந்தி உலகத்தைப் புரக்குந் தலைவனாவான் என்று கூறினன் (எ - று.)
ஆர் அணி - ஆத்திமாலையை அணிந்து என்று உரை கூறுவாரும் உளர். திவிட்டன்
என்றது அம்முதல் வாசுதேவனான திவிட்டன் என்பது பட நின்றது. எனவே பயாபதி
வேந்தன் மகனான திவிட்டனே முதல் வாசுதேவன் என்று உணர்த்தினானுமாம். பரத -
விளி. தெய்வத்தேவன் - தேவதேவன்; அருகன்.

( 165 )