சதவிந்து தான்கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாக
திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்

409. கொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி
இங்கியா 1னிசைத்ததே யமையு மல்லதோர்
திங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு
சிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே.
 

     (இ - ள்.) கொங்கலர் தெரியலான் திறத்தில் - மணத்தை வெளிப்படுத்தும் மலரால்
தொடுக்கப்பெற்ற மாலையை அணிந்த மணமகனைத் தேடும்செயலில், கொள்குறி -
அறிந்துகொள்ள வேண்டிய அறிகுறி, இங்குயான் இசைத்ததே அமையும் - இப்போது
நான்கூறியதே போதும், அல்லது - இதனையல்லாமல், ஓர் திங்கள் நாள் அகவையில் - ஒரு திங்கள் கால அளவில், திவிட்டன் - மேற்கூரிய திவிட்டனானவன், ஒருசிங்கம் வாய் பிளந்திடும் - ஓர் அரிமாவின் வாயைப்பிளந்து கொல்வான், இது தெளி என்ன - இதனை
உணர்ந்துகொள்வாயாக! என்றுகூற, ஆங்கு, அசைநிலை (எ - று.)

திவிட்டனுடைய தன்மையை உணர்ந்துகொள்வதற்கு நிமித்திகன் ஓர் அறிகுறியை
குறிப்பிட்டான்.

( 171 )