இதுவுமது
வேறு

41. அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.
     (இ - ள்.) அகில்எழு கொழும்புகை-அகிற்கட்டை புகைக்கப்படுதலினால் எழுகின்ற
மிகுந்த புகையானது; மஞ்சின் ஆடவும்-முகில்கள்போல அசைந்து தோன்றுதலாலும்;
முழா-மத்தளங்கள்; முகில் இசை என முரன்று விம்மவும்-முகிலினது இடியைப்போல
ஒலித்து மிகுதலாலும்; துகிலிகை கொடி அனார்-ஓவியத்திலெழுதப்பெற்ற பூங்கொடியை
ஒத்தவர்களான மகளிர்; மின்னின் தோன்றவும் - மின்னல்போல விளங்கிக்காணப்படுதலாலும்; மாடம்-நகரத்திலே உயர்ந்து விளங்கும் வீடுகள்; மலையொடு
இகலின - மலைகளோடு மாறுபட்டுத் தோன்றின. (எ - று.)

     மாடங்களுக்கும் மகளிர் கூந்தலுக்கும் கொங்கைகட்கும் ஆடைகட்கும்
மணமூட்டுதற்கிடப்பட்ட அகிற்புகை என்க.

     புகைத்திரள்-முகிலுக்குவமை. முழவின் முரற்சி அம்முகின் மூழக்கத்திற்குவமை.
துகிலிகை - எழுதுகோல். கொடியனார் என்றது ஈண்டு உவமங்குறியாமல் வாளா மகளிர்
என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது. அம்மகளிர் - முகிலிடைத் தோன்றி மறையும்
மின்னலுக்குவமை.
 

 (6)