மக்கட்பேற்றின் மாண்பு கூறல்

413. தொக்கிள மலர்துதை விலாத சோலையும்
புக்கிளந் தாமரை நகாத பொய்கையும்
மிக்கிளம் 1பிறைவிசும் பிலாத வந்தியும்
மக்களை யிலாததோர் மனையு மொக்குமே.
 

     (இ - ள்.) இளமலர் தொக்கு துதைவு இலாத சோலையும் - வாடாத மலர்கள்
நிறைந்து நெருங்கப் பெறாத சோலையும், இளந்தாமரை புக்குநகாத பொய்கையும் - அழகிய
தாமரைகள் பொருந்தி விளங்கப்பெறாத தடாகங்களும், விசும்புமிக்கு இளம்பிறை இலாத
அந்தியும் - விண்ணின் கண்ணே மிகுந்த இளம் பிறையைப் பெற்றிராத மாலைப்போதும்,
மக்களை இலாதது ஓர் மனையும் - மக்கட் பேற்றினைப் பெற்றிராத ஓர் இல்லமும், ஒக்கும் - ஒரே தன்மை யமைந்தனவாக எண்ணப்பெறும் (எ -று.)

மலரற்ற பொழிலும், தாமரையில்லாத பொய்கையும், பிறையில்லாத மாலைக்காலமும்,
மக்களில்லாத மனையும் ஒரே தன்மை அமைந்தனவென்க.

( 175 )