சுயம்பிரபையின் பெருமை

419. மாவினை மருட்டிய நோக்கி நின்மகள்
பூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்
தேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென
ஓவினூற் புரோகித னுணர வோதினான்.
 

     (இ - ள்.) மாவினை மருட்டிய நோக்கி - மானினை மருளச் செய்த
பார்வையையுடையாய், நின் மகள் - உன்னுடைய மகளாகிய சுயம்பிரபை, நாட்பூவை
ஒளித்தேவனுக்கு - அன்றலர்ந்த காயா மலர்போன்ற ஒளிபடைத்த வாசுதேவனுக்கு;
பூவினுள் மடந்தை பொற்பூவை - தாமரை மலரில் எழுந்தருளிய பெண்ணாகிய அழகிய
திருமகளாம்; அமிர்தமாம் - அவனுக்கு அமுதம் போன்றவளாம், தெய்வமாம் -
தெய்வத்தன்மை யுடையவளுமாம்; என - என்று, ஓவில்நூல் புரோகிதன் - கெடாத
நூலறிவினையுடைய சதவிந்து நிமித்திகன், உணர வோதினான் - அறியும்படியாகக் கூறினான்(எ-று.)

நாள் பூவை ஒளித்தேவன் என மாறுக. பூவை - காயாமலர். ஆகுபெயர், தேவனுக்கு
என்றது வாசுதேவனாகிய திவிட்டனை. திவிட்டன் திருமாலாகலின் இவள் பூவினுள்
மடந்தையாகிய பொன் என்றான். அவனுக்குத் தேவியாகலின் அமிர்தம் என்றான்.
உலகிற்குத் தெய்வம் ஆம் என்றான். புரோகிதன் - சதவிந்து.

( 181 )