மாடங்களின் சிறப்பு | 42. | 1கண்ணெலாங் கவர்வன கனக கூடமும் வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும் தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ மண்ணினா லியன்றில மதலை மாடமே. | (இ - ள்.) கண்எலாம் கவர்வன கனக கூடமும் - நோக்குகின்றவர்களுடைய கண்களையெல்லாம் தம் அழகினால் தம்மிடம் இழுப்பனவான பொன்னினாலாகிய கூடங்களும்; வெள்நிலா சொரிவன வெள்ளி வேயுளும் - வெண்மையான திங்கள் ஒளியைப்போன்ற ஒளியை வீசுவனவாகிய வெள்ளியினாலாகிய கூரையும்; தண்நிலா தவழ் - குளிர்ந்த திங்கள் ஒளியை; பரப்பும் மணி - திங்கள் ஒளிக்கற்கள் பதிக்கப்பட்ட; தலமும் - தரையிடங் களும்; சார்ந்து - பொருந்தி; மதலை மாடம் - கொடுங்கைகளையுடைய மாளிகைகள்; மண்ணினால் இயன்றில - (இங்ஙனம் பொன்முதலியவற்றால் இயற்றப்பட்டிருந்தனவேயன்றி) மண்ணினால் இயற்றப்பெற்றில. (எ -று.) கனக கூடம்-பொன்னாலாகிய மன்றம். இதனைப் பொன்னம்பலம் என்ப. வெள்ளி வேயுள் என்றது வெள்ளியால் வேயப்பட்ட கூரையினை. தண்ணிலாத் தவழ்மணி என்றது சந்திரகாந்தக் கல்லினை. மதலை மாடம் பொன் முதலியவற்றால் இயன்றனவே அந்நகரத்துள்ளன; மண்ணால் இயன்ற மாடங்கள் அங்கில்லை என அந்நகரச் செல்வ மிகுதி தெரித்தோதியவாறாம். | (7) | | |
|
|