(இ - ள்.) மருமணி முடியினான் - நறுமணம் மிக்க மாலையை யணிந்த மணி முடியினைத் தாங்கிய அரசனானவன், திருமனைக்கிழத்தி தன் தேங்கொள் சின்மொழி மகிழ்ந்து - அழகிய தன்னுடைய இல்லத்துக்குரிமை பூண்டவளாகிய வாயுவேகையின் இனிமையைக் கொண்ட சிலவாகிய மொழிகளுக்கு மகிழ்ச்சியடைந்து, அவள் பருமணிப்பூண் முலைமார்பிடைபாய - அவளுடைய பருத்த மணிகளாலாகிய அணிகலன்களைத் தாங்கிய கொங்கைகள் தன்னுடைய மார்பிடத்திலே பாயவும், அருமணித் தெரியல் தேன் அழிய - அருமையான அழகிய மாலையினின்றும் தேன் வெளிப்படவும், வைகினான் - இன்பத்துட்டங்கினான், மற்று : அசைநிலை, (எ - று.) தேன் அழிய என்பதற்கு, வண்டுகள் இரிந்தோட என்றும் பொருள் கூறலாம். |