(இ - ள்.) அனலும் வேலினாய் - ஒளி வீசுகின்ற வேற்படையை உடையவனே!, திரிகுழல் சிறுமி தெய்வமே ஆவதற்கு - முறுக்குண்ட கூந்தலையுடைய சுயம்பிரபையானவள் தெய்வமே ஆகி விளங்குதற்கு, ஐயமே ஒழிந்தனம் - ஐயப்பாடு சிறிதும் இல்லாமல் நாங்கள் உணர்ந்து கொண்டோம், இனி - இனிமேல், திவிட்டன் தாதையாம் வெய்ய வேலவன் உழை - திவிட்டனுடைய தந்தையாகவும் கொடிய வேற்படையை உடையவனாகவும் விளங்கும் பயாபதி மன்னன் இடத்திற்கு, வேந்தனே - அரசனே, ஓர் தூது விடுத்தும் - ஒரு தூதுவனை யனுப்புவோம் (எ - று.) மேலே நடக்கவேண்டிய செயல்கட்குத் தூது அனுப்ப வேண்டியது இன்றியமையாத தாகலின், தூதுவனைப் பயாபதி மன்னன்பால் அனுப்புவோம் என்கின்றனர். |